உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம்  சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்

விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம்  சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்

சென்னை மற்றும் புறநகரில், பிரதான சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கு மாநகராட்சியில் முறையான அனுமதி பெற, இடைத்தரகர்கள் வாயிலாக, 20 கோடி ரூபாய் வரை பேரம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில் பொது இடங்கள், தனிநபர் கட்டடங்களில் விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்க தடை உள்ளது. அதேநேரம், 2023ல் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி விதியில், அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்கலாம் என அரசு உத்தரவிட்டது. இதற்கு மாற்றாக, சொத்துவரி உள்ளிட்டவற்றை கருதாமல் வெறும் வருவாயை மட்டும் கருத்தில் வைத்து பிறப்பித்த உத்தரவால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன்படி, அதிகபட்சமாக, 40 அடி அகலம், 20 அடி உயரத்தில் விளம்பரப் பலகை அமைக்கலாம். ஆனால், பெரும்பாலான விளம்பரப் பதாகைகள் சாலையின் அகலம் மற்றும் இடத்தின் அகலத்தை மீறி அமைக்கப்பட்டுள்ளன.உரிய விதிமுறைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்படாததால், சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், இதுவரை அனுமதி கடிதம் வழங்கவில்லை.

14 பேர் பலி

சமீபத்தில், மும்பையில் ஏற்பட்ட புழுதிப்புயலில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து, 14 பேர் உயிரிழந்தனர். இதில் நான்கு பேரின் உடல்களை மீட்கக்கூட முடியாத அளவில் சிதைந்தன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 2,000 பேனர்கள், விளம்பரப் பலகைகள் குறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது. இதனால், மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.இதை சுட்டிக்காட்டி, அகற்றப்பட வேண்டிய விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பர பேனர்களை அடையாளம் காட்டும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சென்னையில் மட்டுமே அனுமதியின்றி 446 பேனர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால், 'எந்த விளம்பர பலகைகளையும் அகற்றத் தேவையில்லை; அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என நம்பிக்கை அளித்து, கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாயிலாக இடைத்தரகர்கள் பேரம் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புரோக்கர்கள் தீவிரம்

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து ராட்சத விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கும் அனுமதி பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி அனுமதி பெறும் நடவடிக்கையில், 50க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.விளம்பர பேனர்களுக்கு, விதிமுறைப்படி 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 6,000 ரூபாய் மட்டுமே அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசியல் கட்சியினர், கவுன்சிலர்கள், அதிகாரிகளை கவனிக்க, விளம்பர நிறுவனங்களிடம், 15 முதல் 20 கோடி ரூபாய் வரை, இடைத்தரகர்கள் பேரம் பேசி வருகின்றனர். குறிப்பாக, அண்ணா சாலையில் விளம்பர பதாகை, பலகைகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக, பெரிய தொகை பேரமாக பேசப்பட்டு வருகிறது.இந்த பேரத்தில் சுமூக தீர்வு ஏற்பட்டால், வரும் ஜூன் மாத இறுதிக்குள், சென்னை மாநகராட்சியில் மட்டும், 200க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.கட்சியினர், அதிகாரிகளை வளைக்கும் இடைத்தரகர்களால், அடுத்தடுத்த மாதங்களில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, பேனர் கலாசாரம் தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், மழைக்காலங்களில் மட்டுமின்றி பொதுவாகவே அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜூன் முதல்...

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:விளம்பரப் பதாகைகள், பலகைகள் முறைப்படி அமைத்திருந்தால், உரிய அனுமதி சான்று வழங்கப்படும். அவ்வாறு அமைக்கப்படாத விளம்பர பதாகைகள், அகற்றப்பட்டு வருகின்றன.விதிமீறிய விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி வழங்க பேரம் நடப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. அவ்வாறு இருந்தால், முறைப்படி மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.அனுமதி கோரிய விளம்பரப் பதாகைகள், பலகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள், விதிகளுக்கு உட்பட்டிருந்தால், ஜூன் மாதத்திற்குப் பின் அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதிகாரிகள் அலட்சியம்திருமழிசை - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது மற்றும் மொபைல் போன் 'டவர்'கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் இருப்போருக்கும், சாலையில் செல்வோருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.எம்.மாரியப்பன், 55,திருமழிசை.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகள் வளர்ந்து வரும் பகுதிகளாக மாறியுள்ளன. இப்பகுதிகளில், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரமாண்ட பேனர்கள் அதிகரித்து உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையாக அனுமதி பெற்று, 'அனுமதி எண்' பேனரில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, நீதிமன்ற உத்தரவு இருந்தும், அரசியல்வாதிகள் தலையீட்டால் விதிமீறல் பேனர்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.- து.மாரியப்பன், 75, மறைமலை நகர்.மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட உரிமையாளர்களுக்கு, எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். விரைவில் அரசு அனுமதியுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டு, விளம்பர பேனர்கள் வைக்க பரிந்துரைக்கப்படும்.- வெங்கடேசன்பேரூராட்சி செயல் அலுவலர், திருமழிசை.

விளம்பர பலகைகள்

ஐரோப்பிய நாடுகளில், கட்டங்களின் பாரம்பரிய அழகை மறைக்கும் எனக் கருதுவதால், விளம்பரப் பலகைகள், பதாகைகளுக்கு அனுமதி கிடையாது. பேருந்து நிறுத்தங்களில் மிகச்சிறிய அளவிலான பில் போர்டுகளுக்கு மட்டுமே, முறையான பராமரிப்பு என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் 400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் நுாற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய சின்னங்களாக வரையறுக்கப்படும் நிலையில் உள்ளன. இதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனி கமிட்டி அமைத்து, 170 கட்டடங்களை பாரம்பரிய பட்டியலில் சேர்க்க சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களின் அடையாளம் பாதிக்கப்படாத வகையில், சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளால் பாரம்பரிய சின்னங்களை மக்கள் மறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: பாரம்பரிய மற்றும் புராதன தன்மையுடன் கூடிய கட்டடங்களை மறைக்கும் வகையில், புது கட்டுமான திட்டங்களையே செயல்படுத்தக் கூடாது என சட்டத்தில் விதிகள் உள்ளன. குறிப்பிட்ட கட்டடங்களை ஒட்டி, குறிப்பிட்ட தொலைவிற்கு புது கட்டடங்கள் கட்டுவதற்கே, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதை துளியும் கருத்தில் கொள்ளாமல், தனியார் நிறுவனங்கள், விளம்பரப் பலகைகளை வைக்கின்றன. சென்னையில் விக்டோரியா ஹால் போன்ற கட்டடங்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆனால், இந்த கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதியில், தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் விளம்பரப் பலகைகளை வைக்கின்றன. இதனால், 100 மீட்டர் தொலைவில் இருந்து பார்த்தால், பாரம்பரிய கட்டடம் தெரியாத நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற விளம்பர பலகைகளுக்கு, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அனுமதி எப்படி கிடைக்கிறது என்பது புதிராக உள்ளது. இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புறநகர் பகுதிகளும் 'மெகா' பேனர்களும்

திருவள்ளூர், திருத்தணி சித்துார் சாலை, பைபாஸ் ரவுண்டானா, ம.பொ.சி.சாலை, அக்கய்ய நாயுடு சாலை, அரக்கோணம் சாலை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அரசியல் கட்சிக் கூட்டம் மற்றும் திருமண விழாக்களில், சாலையோரங்களை ஆக்கிரமித்து, அனுமதியின்றி போட்டிப் போட்டு விளம்பர பேனர்கள் வைப்பது வழக்கம். அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லுாரி, விளையாட்டு கிளப் மற்றும் அகாடமிகள் சார்பிலும் மக்களைக் கவர பிரமாண்ட பேனர்கள் வைக்கப்படுகின்றன.சாதாரணமாக, இரும்புச் சட்டம் அடித்து, 30 முதல் 50 அடி நீளத்திற்கு நெடுஞ்சாலை ஓரம் உள்ள கட்டடங்களில் வைக்கப்படும் அவ்வகையான விளம்பரங்கள், புயல், மழைக்காலங்களில் பெரும் அபாயமாக மாறிவிடுகின்றன.அதேபோல, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, திருப்போரூர் - -செங்கல்பட்டு உள்ளிட்ட சாலைகளிலும் இந்த நிலை தான். இந்த சாலை வழியே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலைகளில் பேனர் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

மாமல்லையில்

கவனச்சிதறல்மாமல்லபுரம், தேவனேரி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையுடன், உட்புற சாலை இணையும் சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பு பகுதியில், புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அதிவேகத்தில் செல்கின்றன. அதேநேரம், வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறினால் பெரும் விபத்து ஏற்படும். இந்த நிலையில் அச்சாலையில் வரிசையாக உள்ள வீடுகளின் மீது இரும்புச் சட்டங்கள் இணைத்து, மிக நீளமான பிரமாண்ட விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. விபத்து அபாயப் பகுதியென தெரிந்தும், இதை எப்படி அனுமதித்தனர் என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.கடற்கரையிலிருந்து, 500 மீ., தொலைவில் உள்ள பதாகை, புயல், சூறாவளிக் காற்றில் கிழிந்தால், சாலையில் செல்வோரின் நிலை விபரீதமாகி விடும். மாமல்லபுரம் நகர்ப்பகுதியில், புதுச்சேரி சாலை புறவழி சந்திப்பு, பூஞ்சேரி சந்திப்பு ஆகிய பகுதிகளும், அபாய வளைவுகளுடன் உள்ளன. இச்சந்திப்புகளிலும், அரசியல், நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ளிட்டவை சார்ந்த பிரமாண்ட பதாகைகள், அரசு துறைகளிடம் அனுமதி பெறாமலேயே அமைக்கப்படுகின்றன.மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:தேவனேரியில் விளம்பர பலகைகள் வைக்க, சில ஆண்டுகளுக்கு முன், கலெக்டர் அனுமதி அளித்துள்ளதால், அதை அகற்ற இயலவில்லை. மற்ற இடங்களில், அனுமதியே பெறாமல் வைக்கும் பதாகைகளையும், அரசியல் பிரமுகர்களின் தலையீடுகளால், அகற்ற இயலவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நெ.சாலை துறை உத்தரவிடுமா?

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கூறுகையில், 'ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், விளம்பரப் பலகைகள் அதிகமாக உள்ளன. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வருவதால், அதை நாங்கள் அகற்ற இயலாது. நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுறுத்தினால், அகற்றத் தயாராக இருக்கிறோம்' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை