மாமல்லபுரம், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொல்லியல் துறையின்கீழ் உள்ள பாரம்பரிய சிற்பமான அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு முன், கோவில் வளாக பகுதி உள்ளது. பாரம்பரிய சிற்ப பகுதிக்குரிய தொல்லியல் கட்டுப்பாடுகள் காரணமாக, கோவில் நிர்வாகம் அப்பகுதியில் கட்டமைப்புகள் ஏதுமின்றி திறந்தவெளியாக பராமரித்து வருகின்றன.இதற்கிடையே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு, 3டி லேசர் ஒளி - ஒலி காட்சி திட்டத்தை, 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, சிற்பத்தின் முன்புறம் உள்ள கோவில் இடத்தில், பார்வையாளர் அரங்கம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது கோவிலுக்கும், பாரம்பரிய சிற்ப பகுதி சூழலுக்கும் இடையூறாக அமைவதாக எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், தொல்லியல் மண்டல இயக்குனர், கடந்த மார்ச் மாதம், சுற்றுலா பொறியாளருடன் இங்கு ஆய்வு செய்தார். அப்போது, இத்திட்டம் சிற்ப பகுதிக்கு இடையூறாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். எத்தகைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்பதை மாதிரியுடன் தெரிவித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.ஆனாலும், அனுமதி பெறாமலேயே சுற்றுலாத்துறை நிர்வாகம் பணிகளை தொடர்ந்தது. ஏற்கனவே அமைத்திருந்த கம்பி இணைப்புகள் மீது, நேற்று முன்தினம் 7 அடி உயர இரும்பு தகடுகளை பொருத்தியது.இது கோவிலையும், சிற்பத்தையும் மறைப்பதாக, பக்தர்கள் கோபமடைந்தனர். சிற்ப பகுதியில், தொல்லியல் துறை அனுமதி பெறாமல், கட்டுப்பாட்டை மீறி கோவில் நிர்வாகம் செயல்படுவதாக, தொல்லியல் துறையினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர்.பணிகளை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தவும் பக்தர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, பொருத்தப்பட்ட தகடுகளை, ஒப்பந்ததாரர் ஊழியர்கள் நேற்று அகற்றினர்.