உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்

நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்

சென்னையில் மாடுகள் முட்டி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிய தடை விதிப்பது குறித்து, தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் பேசி, விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை, திருவொற்றியூர், கிராம தெரு, அம்சா தோட்டம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மதுமதி, 33. இவர், சோமசுந்தரம் நகர் சந்திப்பில், கடந்த 16ம் தேதி மாலை நடந்து சென்ற போது, தறிகெட்டு ஓடி வந்த எருமை மாடு, அவரை முட்டித் துாக்கியது.பின், 50 அடி துாரத்திற்கு, தரதரவென இழுத்துச் சென்றது. காப்பாற்ற வந்தவரையும் எருமை மாடு முட்டித் தள்ளியது. அருகில் இருந்தவர்களையும் முட்ட வந்ததால், அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதேபோல் கடந்தாண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர், மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கம் பகுதியில், பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும், மாடு முட்டியது.ஆவடியில், வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை, மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில், கஸ்துாரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார்.சமீப நாட்களில் மாடு முட்டிய சம்பவத்தில் ஆறு பேர் பாதிக்கப்பட்டனர்.இதுபோன்ற சம்பவங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன.தொடர் சம்பவங்கள் நடந்து வந்தாலும், விலங்குகள் நல சட்டப்படி, மாடுகளை வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், மாடுகளை பிடித்து 5,000 ரூபாய், 10,000 ரூபாய் அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரிய விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013ல் தடை விதிக்கப்பட்டது. பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் உரிமையாளர்கள், மாடுகளை பராமரிப்பது இல்லை.எனவே, மக்கள் கூட்டம் அதிமுள்ள இடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம்.அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குன்றத்துார் அருகே நேற்றும் ஒருவர் பலி

பூந்தமல்லி, திருவெங்கடம் நகரைச் சேர்ந்தவர் மோகன், 45. இவர், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வண்டலுார் - --மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துாரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றார்.மலையம்பாக்கம் பகுதியை கடந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த மாடு மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மோகன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மாடுகள் சாலையில் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது போன்ற சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் போலீசிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ புகார் அளிப்பது இல்லை. இதனால், பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.மக்களின் உயிரை காவு வாங்கும் இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய மாநகராட்சி, ஒவ்வொரு சம்பவங்களின் போது கண்துடைப்புக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது. அதன்பின் கண்டுகொள்வதில்லை. சென்னையில் அதிகாலை முதல் இரவு வரை ஒரு ரவுண்டு போனாலே, சாலையில் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான மாடுகளை சிறைபிடிக்கலாம்.குறிப்பாக, சென்னையில் பிரதான பகுதிகளில் ஒன்றான கோயம்பேடிற்கு சென்றாலே, வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் நுாற்றுக்கணக்கான எருமை மற்றும் பசு மாடுகளை சிறைபிடிக்கலாம். ஆனால், மாநகராட்சி இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கிறது. இதுவே, தொடரும் உயிர் பலி சம்பவங்களுக்கு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஜூன் 21, 2024 17:06

நம்ம கிராமங்ஜளில் காரில் ஆடு திருட வர்ரவங்களிடம்.இந்த மாடுகளை இலவசமா புடிச்சிக்கிட்டு போகலாம்னு சொல்லுங்க. ரெண்டே நாளில் துப்புரவாக்கிடுவாங்க.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை