உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடுக்கடல் தாக்குதலில் 2 மீனவர் காயம் பழவேற்காடில் தொடரும் பதற்றம்

நடுக்கடல் தாக்குதலில் 2 மீனவர் காயம் பழவேற்காடில் தொடரும் பதற்றம்

பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, கூனங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்பகுதியில் வெளிமாவட்ட விசைப்படகுகளில் வந்த மீனவர்கள், வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். அங்கிருந்த மூன்று விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விசைப்படகில் இருந்த மீனவர்கள், பழவேற்காடு பகுதி மீனவர்களை தாக்கினர்.இதில், கூனங்குப்பத்தைச் சேர்ந்த லோகேஷ், 25, பிரதாப், 32, ஆகியோர் காயம் அடைந்தனர். பின், விசைப்படகுகள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டன.காயமடைந்தோரை மீட்டு வந்து, பழவேற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீனவர்கள் தாக்கப்பட்ட தகவல் பரவி, மருத்துவமனை மற்றும் பஜார் பகுதியில் பழவேற்காடு மீனவர்கள் திரண்டனர்.அங்கு பதற்றம் நிலவியதால், கடைகள் அடைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.ஒரு மாதமாக நீடித்து வரும் இப்பிரச்னையில், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொன்னேரி - பழவேற்காடு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன், செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, பொன்னேரி தாசில்தார் மதிவாணன் ஆகியோர் பேச்சு நடத்தினர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.நடவடிக்கை தேவை வெளிமாவட்ட மீனவர்கள் அதிநவீன விசைப்படகுகளையும், தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதால், பழவேற்காடில் மீன்வளம் முழுமையாக பாதிக்கிறது. விசைப்படகுகள், பழவேற்காடு பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதை தடுக்க வேண்டும். மீனவர்கள் தகவல் தெரிவித்தால், கடலோர காவல்படையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துரை மகேந்திரன்,தலைவர், தமிழ்நாடு மீனவர் சங்கம் பழவேற்காடு

பழவேற்காடு மீனவப்பகுதியில், 15 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், பைபர் படகுகளில், 8 - 10 நாட்டிக்கல் மைல் தொலைவு சென்று, மீன்பிடி தொழில் செய்கின்றனர். அந்த எல்லைக்குள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிவேக திறன் உடைய விசைப்படகுகளில் வரும் மீனவர்களும் மீன்பிடிப்பதால், இரு தரப்பிற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.

கடந்த மாதம், 20ம் தேதி, பழவேற்காடு பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த மீனவர்கள், விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அங்கு 20க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற பழவேற்காடு பகுதி மீனவர்கள், விசைப்படகில் இருந்த 34 பேரை சிறை பிடித்தனர். அதிகாரிகள் சமரசத்திற்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், வெளி மாவட்ட மீனவர்கள் நடத்திய தாக்குதலில் பழவேற்காடு மீனவர்கள் காயமடைந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை