3 மின்சார ரயில் சேவை துவக்கம் 5 ரயில்களின் சேவை நீட்டிப்பு
சென்னை, சென்னை புறநகரில், வரும் 9ம் தேதி முதல் மூன்று மின்சார ரயில் சேவை துவங்கப்படுகிறது. இதேபோல், ஐந்து மின்சார ரயில்கள், நீட்டித்து இயக்கப்படுகின்றன.சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில், தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த நிர்வாகம், வரும் 9ம் தேதி முதல் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவையை துவங்குகிறது. மேலும், ஐந்து ரயில்களின் சேவையும் விரிவாக்கம் செய்துள்ளது.இதன்படி, ஆவடி - சென்ட்ரலுக்கு காலை 9:50, சென்ட்ரல் - திருவள்ளூருக்கு காலை 10:40, திருவள்ளூர் - சென்ட்ரலுக்கு மாலை 3:50 மணிக்கு புதிய மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி முதல் துவங்கும். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பகல் 12:10 மணி ரயில், சூலுார்பேட்டைக்கு நீட்டித்து இயக்கப்படும். கூடுவாஞ்சேரி - தாம்பரம் இரவு 8:55, இரவு 10:10, 10:25, 11:20 மணி ரயில்கள் கடற்கரை வரை நீட்டித்து இயக்கப்படும்.இதுதவிர, சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில் 28 ரயில்களின் நேரத்தில், ஐந்து முதல் 30 நிமிடங்கள் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரயில் கோட்டம் இத்தகவலை தெரிவித்துள்ளது.