| ADDED : ஜூலை 24, 2024 12:36 AM
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் மகன் ஜோதிராமன், 11; அரசு பள்ளி 6ம் வகுப்பு மாணவர். கடந்த 21ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாட சென்றபோது, அதிக விஷமுடைய கருந்தேள் கொட்டியுள்ளது.பெற்றோர் அவரை, பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.'தேள் கொட்டி உயிரிழப்பு ஏற்படுவது அரிதானது. உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதே இறப்பிற்கு காரணம்' என சிறுவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'திருவள்ளூர் மருத்துவமனையில் விஷ முறிப்பு மருந்துகள் போதுமான அளவு உள்ளன. தேள் கொட்டியதில் விஷத்தின் தன்மை அதிகம் இருந்திருக்கலாம். இதனால் பக்கவிளைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். உரிய நேரத்தில் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். உடற்கூறாய்வுக்கு பின் முழு தகவல் தெரியவரும்' என்றார்.