| ADDED : மே 03, 2024 11:53 PM
அண்ணா நகர், அண்ணா நகர் ஆர்ச் அருகிலுள்ள மேம்பாலத்தில், அரைகுறையாக விடப்பட்டுள்ள பூங்காவை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக, மேம்பாலங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. அதன்படி, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் 'ஆர்ச்' பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத்தில், சென்னை மாநகராட்சி சார்பில் இரு ஆண்டுகளுக்கு முன் அழகுபடுத்தும் பணிகள் துவங்கின.அங்குள்ள 48 துாண்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், சென்னை மாநகராட்சி வண்ணம் பூசுதல் மற்றும் வண்ண விளக்குதல் அமைத்தல் பணிகளை துவக்கியது. அதன் பின், போதிய நிதி இல்லாததால், பணிகள் அறைகுறையாக விடப்பட்டன. அதேபோல், மேம்பாலத்தில் கீழ் பகுதியில் சிறிய அளவில் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கின.அதற்காக இடங்களை துாய்மைப்படுத்தி, சீரமைப்பு பணிகளும் ஆரம்பித்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அண்ணா நகர் மண்டலத்தில் செயற்பொறியாளர்கள் மாற்றத்திற்குப் பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.இரண்டு ஆண்டுகளாகியும் பூங்கா பணிகள் துவங்காமல் இருப்பதால், தற்போது அந்த இடங்கள் புதர் மண்டியது போல் காட்சியளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, இந்த பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.