| ADDED : ஜூன் 27, 2024 12:17 AM
சென்னை, கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவற்றுக்கு, காஞ்சிபுரம், வடசென்னையில் தண்டையார்பேட்டை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில், பல ஏக்கரில் காலியிடங்கள் உள்ளன.கூட்டுறவு சங்கத் தலைவர்களாக இருந்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், சங்க இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இதை தடுப்பது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி கூறியதாவது:கூட்டுறவு துறையின் பல சங்கங்கள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சங்கங்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளன.கேரளாவில் கூட்டுறவு மருத்துவமனை உள்ளது. அங்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் கூட்டுறவு சங்க காலியிடங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கூட்டுறவு மருந்தகங்கள் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த இடத்தில், திருமண மண்டபம் கட்டவும் திட்டமிருக்கிறது.அரசிடம் அனுமதி பெற்று, அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.