உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கலர்புல் டூ - வீலரை குறிவைத்து திருடிய பலே முதியவர் சிக்கினார் 14 வாகனங்கள் பறிமுதல்

கலர்புல் டூ - வீலரை குறிவைத்து திருடிய பலே முதியவர் சிக்கினார் 14 வாகனங்கள் பறிமுதல்

தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமான புகார்கள் அதிகளவில் வந்தன. தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதியவர் ஒருவர் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, தனிப்படை போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், அந்த நபர் டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் பிளஸ் ரக ஸ்கூட்டரை திருடி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிக்கு செல்வது கண்டறியப்பட்டது. அவரை பின்தொடர்ந்து, 27ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு ஊரப்பாக்கம் சந்திப்பு அருகே தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர்.விசாரணையில், தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், 60, என்பது தெரியவந்தது. இவர், கடந்த இரண்டரை மாதங்களில், தாம்பரம், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியாலும், ஒயரை துண்டித்து, துண்டு ஒயர் மூலம் இணைப்பு ஏற்படுத்தி, பக்கவாட்டு பூட்டை உடைத்து, திருடியது தெரியவந்தது.திருடிய வாகனங்களை, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்து சென்று, கிராம பகுதிகளில், சாதாரண வியாபாரிகள் மற்றும் பால் வியாபாரிகளிடம் வாகன எண்ணை மாற்றி, குறைந்த விலைக்கு ஏமாற்றி விற்றுள்ளார்.விற்பனை செய்யப்பட்ட ஒன்பது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊரப்பாக்கத்தில் ஹரிஹரன் குடியிருந்த வீட்டின் மேற்கு பக்கம் பதுக்கி வைத்திருந்த ஐந்து வாகனங்கள் என, 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது புதிதல்ல

ஹரிஹரன் 50க்கும் மேற்பட்ட டி.வி.எஸ்., ஸ்கூட்டி உள்ளிட்ட ஸ்கூட்டர் ரக வாகனங்களை திருடிய வழக்கில், சூளைமேடு, சைதாப்பேட்டை, மாம்பலம், மயிலாப்பூர், சேலையூர், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலையங்களில், சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
ஆக 29, 2024 18:26

எங்க உ(எ)ச்சம் இருக்கும் வரை கவலை இல்லை. எந்த நேரத்திலும் எந்த எல்லை வரை தவறு செய்யலாம். ஜாமீன் உறுதி. அதை அடிப்படை உரிமை ஆக மாற்றி விட்டால் நாடு செழிப்பாக இருக்கும்


சமீபத்திய செய்தி