| ADDED : ஜூலை 13, 2024 12:30 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் அலீனா, 32; திருநங்கை. இவர், கடந்த 2021ம் ஆண்டு வியாசர்பாடி, அவ்வை நகரைச் சேர்ந்த தமிழரசி என்பவரிடம், 20 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். இதற்கு, 32.60 லட்ச ரூபாய் வட்டி கட்டியுள்ளதாகவும், தவிர 5 லட்ச ரூபாய் அசலும் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், தமிழரசியிடம் அலீனா, 10 லட்ச ரூபாய் சீட்டு திட்டத்தில் சேர்ந்து, அதற்கு மூன்று மாதம் தவணையும் கட்டியுள்ளார். பின் சீட்டை ரத்து செய்ததால், கட்டிய தொகை 4.62 லட்சத்தை வாங்கிய கடனில் வரவு வைத்துக் கொள்ள கூறியுள்ளார். ஆனால் தமிழரசி அதற்கு மறுத்து, 'கட்டிய பணம் வட்டிக்கே சரியாகிவிட்டது' எனக் கூறியுள்ளார்.இந்நிலையில், ஏற்கனவே கடன் வாங்கியிருந்த வேறு ஒரு திருநங்கையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கும் போது அதை அலீனா வைத்து படம் பிடித்து வைத்துள்ளார். அதேபோல் அலீனாவும் தமிழரசி மற்றும் ஆட்களால் தாக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து கடனுக்கு வட்டி கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தமிழரசி மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அலீனா புகார் அளித்தார்.மேலும், திருநங்கையரான அருணா, ஷாலு, விசித்திரா, அஸ்வினி உட்பட மேலும் சிலர், தமிழரசி மற்றும் அவரது கூட்டாளியான 'டாட்டு' மணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.