| ADDED : ஜூன் 22, 2024 12:34 AM
ஆலந்துார், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டல குழுக்கூட்டம் அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், பல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர் பேசியதாவது:நங்கநல்லுார் பகுதியில் அரைகுறையாக உள்ள மழைநீர் வடிகால் பணியை மழைக்காலத்திற்கு முடிக்க வேண்டும். ஆலந்துார் பகுதியில் பல இடங்களில் வேகத்தடை அவசியப்படுகிறது. சுபேதார் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். போக்குவரத்திற்கு லாயக்கற்று படுமோசமாக உள்ள மணப்பாக்கம் ------முகலிவாக்கம் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும். மதனந்தபுரம்- - முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்திற்கு வழியின்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.மண்டலக் குழு தலைவர் சந்திரன் கூறியதாவது:மண்டலம் முழுதும் குப்பையை அகற்றுவதிலும், அடிக்கடி மழை பெய்வதால் சுகாதாரத்துறை தனி கவனம் செலுத்த வேண்டும். பணிகள் நடக்கும் அனைத்து இடங்களில் பாதுகாப்புக்கு தடுப்புகள் அமைக்க வேண்டும். மண்டலத்தில் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தால், அந்தந்த பகுதி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவமழைக்கு முன் மின்மோட்டார்கள், மழைநீர் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில்,86 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.