உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் நிதியில் கலாசார மையம் உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்

கோவில் நிதியில் கலாசார மையம் உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம், நிதியில் கலாசார மையம் கட்டுவது தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக, கிரீன்வேஸ் சாலையிலுள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில், 'கலாசார மையம்' கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இந்த மையம், 28.76 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என, கடந்த 2023 செப்.,4ம் தேதி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கலாசார மையம் கட்ட தடை விதிக்க கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த,'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 88 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தில், கலாசார மையம் கட்டுவதன் வாயிலாக, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வாடகை வருவாய் பாதிக்கப்படும். கோவில் நிதி 28.76 கோடி ரூபாயை கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2.50 கோடி ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும்.அரசு கலாசார மையம் அமைக்க விரும்பினால், அதை கோவில் நிலத்தில், நிதியில் அமைக்க முடியாது. அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கலாம். திட்ட அனுமதி இல்லாமல் கலாசார மையம் கட்ட முடியாது.கலாசார மையம் கட்டுமான பணிகள், தற்போது துவக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா? என்பது குறித்து, அறநிலையத்துறை விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.அதன்படி மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி,''கலாசார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை பெறாமல், எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது.கோவிலின் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே, ஆட்சேபங்கள் கோர வேண்டும். கலாசார மையம் வாயிலாக கோவிலுக்கு வருவாய் கிடைக்கும்,'' என்றார்.இதையடுத்து, அட்வகேட் ஜெனரலின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை, ஜூன் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், இந்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்; வழக்கு முடியும் வரை, கலாசார மையம் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ