உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ நுழைவாயிலை மாற்ற சாத்தியக்கூறுகள் இன்று ஆய்வு

மெட்ரோ நுழைவாயிலை மாற்ற சாத்தியக்கூறுகள் இன்று ஆய்வு

சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் அமைய உள்ள ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலைய வாயிலை அருகில் உள்ள இடங்களில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இன்று தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த 'ஆலயம் காப்போம்' கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், நுாற்றாண்டுகள் பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்காக, ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையில், சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.இப்பகுதியில் ஆயிரம்விளக்கு ரயில் நிலையத்தை, மெட்ரோ நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கோவில் ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜூன்., 14ல் மனு அளிக்கப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் இல்லை. எனவே, ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; கோபுரத்தை இடிக்கும் வகையிலான திட்டத்தை மாற்றக்கோரி அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' 'கோவில் கோபுரத்தை ஏன் இடிக்க வேண்டும்; தற்போது நம்மிடம், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. 'அதன் வாயிலாக ராஜகோபுரத்தை நகர்த்த முடியுமே?' என, கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவிக்கும்படி கூறி, விசாரணையை தள்ளிவைத்தது.இந்த வழக்கு, முதல் பெஞ்ச் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின், மெட்ரோ ரயில் நிலைய வாயிலை அருகில் உள்ள இடங்களில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தொழில்நுட்ப குழு இன்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ