சென்னை, சென்னை, வேளச்சேரி நேரு நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன், 11.அப்பகுதியில் 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு, இடது கால் விரலில் அடிக்கடி வலி ஏற்பட்டது. இதனால், ஏப்., மாதம், ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் பன்னோக்கு மருத்துவமனைக்கு, மகனை, சின்னையா அழைத்து சென்றுள்ளார்.சிறுவனை பரிசோதித்த டாக்டர், காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என, சிகிச்சை அளித்துள்ளார். பின், கால் வலி குறையாமல் வீக்கம் அதிகரித்து, கால் கருப்பு நிறமாக மாறியுள்ளது.காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், காலை சரி செய்ய முடியாது. அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து எனக்கூறி, கால் அகற்றப்பட்டது.இந்நிலையில், தவறான சிகிச்சையால் தான் மகனின் கால் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தவறான சிகிச்சை அளித்த டாக்டர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் சின்னையா புகார் அளித்தார்.பின், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக அதிகாரிகள், 19ம் தேதி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.அதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், மருத்துவமனை அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.இது குறித்து, மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குனர் ஜெ.ராஜமூர்த்தி கூறியதாவது:சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, சிகிச்சை ஒன்று உள்ளது. அதை அவர்கள் அளித்திருக்கலாம்; அவர்கள் செய்யவில்லை.எந்த சிகிச்சை அளித்தாலும், அதற்கான பின்விளைவுகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அதையும் அவர்கள் முழுமையாக தெரிவிக்கவில்லை.மருத்துவமனையில் சில வசதிகளும் இல்லை. மருத்துவமனை தரப்பில் சில தவறுகள் உள்ளன. எனவே, ஏழு நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தெரிவித்திருக்கிறோம்.அவர்கள் விளக்கம் அளித்து, குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்தால், மீண்டும் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.அதுவரை, தற்காலிகமாக புறநோயாளிகளை பார்க்கக்கூடாது. உள்நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்ற கூறியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.