சென்னை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின், நான்காம் ஆண்டு துவக்க விழா சைதாப்பேட்டையில், நேற்று நடந்தது. அதில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், மக்களுடைய வீடுகளுக்கே சென்று, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், 1.86 கோடி பேர் பயனடைகின்றனர். இவர்களில் உயர் ரத்த அழுத்தத்தால் 92.59 லட்சம் பேர், நீரிழிவு நோயால் 46.54 லட்சம் பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் 41.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சையிலும் பலர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் விரைவில், இரண்டு கோடி பயனாளிகள் இணைவர்.இத்திட்டத்தில், 10,969 சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், 463 இயன்முறை சிகிச்சையாளர்கள், 2,892 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர்.கிராமப்புறங்களில், 100 சதவீதம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை போன்ற நகரங்களில், இத்திட்டத்தை கொண்டு செல்வது சவாலாக உள்ளது. சென்னையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தாலும், அடுக்குமாடிகளில் குடியிருப்பவர்களை அணுக முடியாத நிலை உள்ளது.அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பயன்பெற விரும்பினால், 104 என்ற அவசர உதவி எண்ணை அழைத்தால், தேவையான உதவிகள் செய்து தரப்படும். அதேபோல், தொழிலாளரை தேடி மருத்துவ திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.