உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் தொடர்ந்து மின்வெட்டு துாக்கமின்றி தவிக்கும் மக்கள்

இரவில் தொடர்ந்து மின்வெட்டு துாக்கமின்றி தவிக்கும் மக்கள்

ஆவடி, ஆவடி மாநகராட்சி கோவில் பதாகையில் 5, 6, 11 மற்றும் 12வது வார்டுகள் உள்ளன. இங்குள்ள கலைஞர் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், அசோக் நகர் 'கிறிஸ்ட்' காலனி உள்ளிட்ட பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கோவில் பதாகை பகுதிக்கு, திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் பகிரப்பட்டு வருகிறது.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, கோவில் பதாகையில், இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. இரவு 10:00 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம், அதிகாலை 2:30 மணிக்கு மேல் தான் வருகிறது.இதனால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, கொசுக்கடிக்கும், வெப்ப புழுக்கத்தில் துாக்கமின்றியும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அதே போல், கோவில்பதாகை பகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவி பொறியாளர் நியமிக்கப்படவில்லை. இதனால், மின்வெட்டு பிரச்னைக்கு யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரியாமல், பகுதிவாசிகள் புலம்பி வருகின்றனர். தொடரும் மின்வெட்டு பிரச்னைக்கு, மின் வாரிய அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. மின்வாரிய ஊழியர் கூறியதாவது:கோடை காலம் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால், கோவில் பதாகையில் மின் தேவை அதிகரித்துள்ளது. இரவில் 'ஏசி' பயன்பாடு அதிகரிப்பதால், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.கோவில்பதாகையில் ஏற்படும் மின் பிரச்னைக்கு, கூடுதலாக மின்மாற்றி அமைக்க வேண்டும். தவிர, ஊழியர் பற்றாக்குறையால் மின்வெட்டு பிரச்னையில் உடனே தீர்வு காண முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ