| ADDED : மே 25, 2024 06:29 PM
அண்ணா நகர் : கிழக்கு அண்ணா நகர் வழியாக செல்லும் நல்லான் கால்வாயில் போதிய பராமரிப்பு இல்லாததால், நீரில் குப்பைகள் குவிந்து, புதர் மண்டி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரிய மழைநீர்வடி கால்வாய்களில் ஓட்டேரி நல்லா கால்வாயும் ஒன்று. மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் வடிந்து செல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.இக்கால்வாய், அண்ணா நகர் மண்டலத்திற்குபட்ட பாடி, வில்லிவாக்கத்தில் துவங்கி அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஒட்டேரி, புளியந்தோப்பு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது.நீர்வளத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள 10.84 கி.மீ., துாரம் கொண்ட கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. இக்கால்வாய் அண்ணா நகர் கிழக்கு பகுதியான, பள்ளி அரசன் தெருவின் வழியாக சென்று கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலை மற்றும் ஆஸ்பிரியன் கார்டனை கடந்து ஓட்டேரி கால்வாயில் இணைகிறது. பள்ளி அரசன் தெரு வழியாக செல்லும் கால்வாயில், குப்பை கழிவுகள் தேங்கி குவிந்துள்ளன. அதேபோல் நீர் வெளியேறும் கால்வாயில் போதிய பராமரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றி உடனடியாக துார்வாராவிட்டால், நீரோட்டம் தடைப்படும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.