| ADDED : மே 06, 2024 12:56 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பழனிப்பேட்டையைச் சேர்ந்தவர் மதன்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கும் நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த ரேவதி, 29, என்பவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.ரேவதி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வருவதால், மதன்குமார் சில மாதங்களுக்கு முன் அதே கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதன்குமார் வழக்கம் போல் பணிக்கு சென்று, இரவு வீடு திரும்பினார். கடும் பசியில் இருந்தவர், மனைவி சமையல் செய்யாததால் ஆத்திரமடைந்தார்.இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகளுக்கு ஆதரவாக மாமியார் சுசீலா, 58, பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, சுசிலாவின் கழுத்தில் வெட்டினார். தடுக்க வந்த ரேவதியின் தங்கை ரோஜா மற்றும் உறவினர் பிரகாஷ் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மதன்குமாரை பிடித்து, அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தை மூவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அரக்கோணம் தாலுாகா போலீசார், மதன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.