உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்

எண்ணுார் முகத்துவார பயிற்றுச்சுவர் கட்டுமானம்... இறுதிக்கட்டம்! வெள்ள அபாயம், மணல் குவிவதை தடுக்க திட்டம்

எண்ணுார், எண்ணுார் முகத்துவாரப் பகுதியில், மணல் குவிவதை தடுக்க அமைக்கப்படும் பயிற்றுச்சுவருக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், உபரி நீர் கால்வாய்கள் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் பாய்ந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக, கடலில் கலப்பதற்கான வழித்தடம் உள்ளது.

1 லட்சம் கன அடி

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 2015ல் கொட்டித்தீர்த்த கனமழையால், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் ஆர்ப்பரித்த வெள்ளம் என, ௧ லட்சம் கனஅடிக்கும் மேல், முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது.கடல் வாட்டம் காரணமாக வெள்ளநீர் உள்வாங்காததால், வடசென்னையின், திருவொற்றியூர், மணலி மண்டலங்கள் முழுதும் வெள்ளக்காடாக மாறி கடுமையாக பாதிக்கப்பட்டது.தொடர்ந்து, 2017, 2020, மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வடசென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு, உபரி கால்வாய்கள் சரியாக துார்வாரப்படாததே காரணம் என, குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, முகத்துவாரத்தை துார்வாரி ஆழப்படுத்துவதுடன், இருபக்கமும் துாண்டில் வளைவு போன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.அதைத் தொடர்ந்து, எண்ணுார் காமராஜர் துறைமுகம் - சமூக மேம்பாட்டு நிதியின் கீழ், 135 கோடி ரூபாய் செலவில், துாண்டில் வளைவு போன்ற கட்டுமானம் மேற்கொள்ளும் பணிக்கான திட்டவரைவு மேற்கொள்ளப்பட்டது.

தரமற்ற கற்கள்

அதன்படி, கடந்தாண்டு மார்ச் 22ல், பூமி பூஜை போடப்பட்டு, பயிற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கி மும்முரமாக நடக்கின்றன. இதற்கிடையில், கட்டுமான பணிகளில் தரமற்ற கற்கள் கொண்டு பணிகள் மேற்கொள்வதாகவும், இதனால், ஒரு புயலுக்கு கூட, பயிற்றுச்சுவர் தாக்கு பிடிக்காது எனவும் மீனவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகத்துவார நடுப்பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, கைவிடப்பட்ட சிதிலமடைந்த மேம்பாலம் உள்ளது.படகுகள், அலையில் சிக்கும் போது, இந்த மேம்பால துாண்களில் சிக்கி, சேதமாகின்றன. அவற்றை அகற்ற வேண்டும் என்றும், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகத்துவாரத்தில் மணல் சேர்வது

28,000 கனமீட்டராக குறையும்'இருபுறம் அமைக்கப்படும் பயிற்றுச்சுவர்களால், எண்ணுார் முகத்துவாரத்தில் ஆண்டுக்கு 28,000 கன மீட்டர் அளவிற்கே மணல் சேரும். அதை அப்புறப்படுத்துவதும் எளிதாகும்' என, பொதுப்பணி துறையினர் கூறினர்.இது குறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:எண்ணுார் முகத்துவாரத்தில் மேற்கொள்ளும் திட்டம், திருவொற்றியூர் சூரை மீன்பிடித்துறைமுகம், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் துாண்டில் வளைவுகள் போன்ற அமைப்பு கிடையாது. கடல் அலை வாட்டம் காரணமாக, ஆண்டுக்கு சராசரியாக, 2.28 லட்சம் கனமீட்டர் மணல், முகத்துவாரத்தில் குவிகிறது. இதன் காரணமாக, முகத்துவாரம் மூடி, வெள்ளநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், மணலை அகற்றும் 'டிரஜ்ஜிங்' பணியும் தொடர் செலவினமாக இருப்பதால், மணல் திட்டுகள் உருவாகாத அளவிற்கு, இருபுறமும் நீரோட்டத்தை வழிப்படுத்தும் பயிற்றுச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. துாண்டில் வளைவுகள் போல், வளைத்து விட்டால் வெள்ளநீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால், வடசென்னை முழுதும் கடுமையாக பாதிக்கப்படும். வடக்கு பக்க பயிற்றுச் சுவர், 1,660 அடி துாரத்திற்கும், தெற்கு பக்க பயிற்றுச்சுவர், 1,340 அடி துாரத்திற்கும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விரண்டிற்கும், 792 அடி அகலம் இடைவெளி உள்ளது.இந்த இடைவெளி வழியாக தான், எட்டு மீனவ கிராம மக்களின் படகுகள் கடலுக்கு செல்ல முடியும். பெருக்கெடுக்கும் வெள்ளநீரும், கடலில் கலக்கும்.பணிகள் முழுதுமாக முடியும் பட்சத்தில், ஆண்டுக்கு 28,000 கன மீட்டர் அளவிற்கே மணல் சேரும். அவற்றை எளிதில் அகற்ற முடியும். முகத்துவார பராமரிப்பு செலவும் குறையும்.தேசிய கடல்சார் நிறுவனம் வடிவமைத்தபடி, பயிற்றுச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், எந்தவித குளறுபடிகளும் கிடையாது.தற்சமயம், 95 சதவீதம் அளவிலான பணிகள் முடிந்து விட்டன. இம்மாத இறுதிக்குள், 108 கோடி ரூபாய் மதிப்பிலான, பயிற்றுச் சுவர் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவுறும்.முகத்துவாரத்தை பொறுத்தமட்டில், தற்போது, வினாடிக்கு, 80,000 கன அடி அளவிற்கான நீர், கடலில் கலக்கும் அளவில் உள்ளது. துார்வாரி ஆழப்படுத்திய பின், அது கூடும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ