| ADDED : ஜூலை 08, 2024 01:46 AM
கோபாலபுரம்:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டை இடிக்கும் போதும், கட்டடம் கட்டும் போதும், அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில், அந்த இடத்தைச் சுற்றி வலை கட்ட வேண்டும். அப்போது தான், கட்டடம் உடைக்கும் போது கற்கள் சிதறி, அருகில் வசிப்போர் மீது விழாது. மேலும், காற்றில் துாசி பறந்து, அக்கம் பக்கத்தில் வீடுகளில் பரவாமல் தடுக்கப்படும். ஆனால், தேனாம்பேட்டை மண்டலம் வடக்கு கோபாலபுரம், இரண்டாவது தெருவில், இரண்டு ஆண்டுகளாக ஒரு கட்டடம், எந்தவித வலையும் அமைக்காமல் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கட்டடத்தை சுற்றியுள்ள வீடுகளில் துாசி படிவதால், பகலில் கூட ஜன்னலை திறக்க முடிவதில்லை. அங்கு வசிக்கும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.மேலும் கட்டடம் கட்டி வரும் ஒப்பந்ததாரரும், தெருவை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை வைத்துள்ளார்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில், அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். ஆனால், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.