10 கிலோ கஞ்சா பறிமுதல் மே.வங்க நபர்கள் சிக்கினர்
கண்ணகி நகர், மேற்கு வங்கம் மாநிலத்தில் இருந்து, 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் பேருந்து நிலையம் அருகே, இருட்டான பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்தபோது, ஒரு நபர் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில், மேற்கு வங்கம் மாநிலம், பிர்கும் பகுதியை சேர்ந்த மொஸ்தகின், 24, என தெரிந்தது. இவர், மேற்கு வங்கம் மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, ஓ.எம்.ஆரில் விற்பனை செய்வது தெரிந்தது. அதேபோல், இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த, மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த பிரணவ்குமார் சென், 52, என்ற நபரை, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து, 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.