சிட்லப்பாக்கம் ஏரி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப பலி
சிட்லப்பாக்கம்,சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர், கண்ணப்பர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சஞ்சய், 13. ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் லோகேஷ், 13. இருவரும், சேலையூர் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்ததால், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் இருவரும், சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்தனர். ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற லோகேஷும், தண்ணீரில் மூழ்கி, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காலை, ஏரியில் மிதந்த சிறுவர்களின் சடலங்களை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சடலங்களை மீட்டு, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.