22 தெரு விளக்குகள் அவுட் கத்திவாக்கத்தில் வழிப்பறி பீதி
எண்ணுார்:எண்ணுார் - கத்திவாக்கம் மேம்பாலம், அன்னை சிவகாமி நகர், எண்ணுார் மற்றும் எர்ணாவூரை இணைக்கும் வகையிலான மூன்று வழி பாலமாகும். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. எண்ணுார் நோக்கி செல்லக்கூடிய, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இவ்வழியே பிரதானம். இந்நிலையில், 10 நாட்களாக, கத்திவாக்கம் மேம்பாலத்திலிருந்து, எர்ணாவூர் மேம்பாலம் செல்லக்கூடிய சாலையில், 22 தெருவிளக்குகள் ஒளிரவில்லை.இதன் காரணமாக, அந்த சாலை கும்மிருட்டாக இருப்பதால், இரவு வேளைகளில் வழிப்பறி அச்சம் நிலவி வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்கள் அரங்கேற அதிக வாய்ப்புள்ளது.எனவே, தெருவிளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டு, ஒளிர செய்ய வேண்டும். தவிர, தொடர்ந்து தெருவிளக்குகளை கண்காணிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.