சென்னை, வில்லிவாக்கத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டுக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில், எம்.டி.எச்., சாலை உள்ளது. இந்த பிரதான சாலையில் நாதமுனி சிக்னல் அருகில், 'கடை எண்: 320'ல் அரசுக்குச் சொந்தமாக டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.இதன் அருகில், நாதமுனி திரையரங்கம் பேருந்து நிலையம், தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் வசிப்போர் மற்றும் வழியாக செல்வோர், கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:எம்.டி.எச்., சாலையில் இயங்கும் இந்த டாஸ்மாக் கடை, அரசின் விதியை மீறி, 24 மணி நேரமும் இயங்குகிறது. காலை முதல் இரவு வரை, விடிய விடிய விற்பனை நடப்பதால், குடிமகன்கள் சாலையிலேயே விழுந்து கிடக்கின்றனர்.அருகில், நாதமுனி மாநகர பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தினமும் பிராட்வே, கீழ்ப்பாக்கம், அயனாவரம், வள்ளலார் நகர் வரை, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.பயணியரை கிண்டல் செய்வதுடன், முகம் சுளிக்கும் வகையிலும் குடிமகன்கள் நடந்து கொள்கின்றனர்.இதனால், சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பும் ஏற்படுகிறது.தவிர, சுற்றியுள்ள கடைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த டாஸ்மாக் கடையை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.