சென்னை, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு, பருந்து, நிவாரணம் என, மூன்று செயலிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட 'பந்தம்' திட்டத்தை, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு
திருடுபோன வாகனங்களை கண்டுபிடிப்பது, இதுபோன்ற வாகனங்களை பயன்படுத்தி கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க, 1.81 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.திருடு போன வாகனங்களின் பதிவு எண் பதிவேற்றம் செய்யப்பட்டு, 75 கேமரா மற்றும் 50 நகரும் கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, வாகனம் கண்டுபிடிக்கப்படும். பருந்து செயலி
பழைய குற்றவாளிகள், மற்ற குற்றவாளிகள் விபரங்களை பதிவு செய்யும் வசதி, உயர்தர தேடல் தகவல்கள் மேம்படுத்தப்பட்ட, 24 மணி நேரமும் கண்காணிக்கும் தளமாக, 'பருந்து' செயலி செயல்படுகிறது.பழைய குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகளை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது. பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற, இச்செயலி பெரும் பங்காற்றும். பந்தம்
சென்னையில் வசிக்கும், 75 வயதிற்கு மேற்பட்டவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 'பந்தம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அவசர சேவை உதவி தேவைப்பட்டால் காவல் துறையின் கட்டணமில்லா உதவி எண்: 9499957575ஐ பயன்படுத்தி கொள்ளலாம். நிவாரண செயலி
போலீஸ் அதிகாரிகள், இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, 'நிவாரணம்' செயலி துவக்கப்பட்டுள்ளது.சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில் குமார் சரட்கர், சுதாகர், அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.