கார் கண்ணாடி உடைத்த மர்ம நபர்களுக்கு வலை
ஓட்டேரி: அயனாவரம் நேருஜி ஜோதி நகரை சேர்ந்தவர்கள் ஆருத்திரன், 22, கிருஷ்ணமூர்த்தி, 59, சிவகுமார், 48 மற்றும் ரகுராமன், 44. இவர்கள் வசிக்கும் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் பணி நடப்பதால், தங்களுக்கு சொந்தமான கார்களை, பனந்தோப்பு ரயில்வே காலனி மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார்களின் கண்ணாடிகளை கல் வீசி உடைத்து சென்றனர். ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடிகள் சிலர் மதுபோதையில் கார் கண்ணாடிகளை உடைத்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ***