தொடர் விபத்தால் வேகத்தடைகளை உடைத்தெறிந்த ஆலந்துார் மக்கள்
ஆலந்துார்:ஆலந்துார் மண்டலத்தில், பிரதான சாலைகளில் பல ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வேகத்தடைகள், விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியதால், மக்களே அவற்றை உடைத்தெறிந்தனர்.ஆலந்துார் மண்டலத்தில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில், ரிப்ளெக்டருடன் கூடிய 'பேப்ரிக்கேட்' வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.அடுத்தடுத்து அமைக்கப்பட்ட இரண்டு வேகத்தடைகளை கடக்கும் வாகன ஓட்டிகள், கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளை சந்தித்தனர். இதனால், வேகத்தடை அமைக்கப்பட்ட சில இடங்களில், ஒரு வேகத்தடையை அப்பகுதி மக்களே உடைத்து அகற்றினர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:வாகனங்களின் போக்குவரத்திற்கு ஏற்ப வேகத்தடைகளை அமைக்காததால், பல ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அவை, சில நாட்களிலேயே உடைத்து அகற்றப்பட்டுள்ளன.இதனால், மக்கள் வரிப் பணம் தான் வீணானது. நெடுஞ்சாலைத்துறையினர் சரியான முறையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.