சென்னை: சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பஸ்களை மீண்டும் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவே, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில்1,500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றி செல்லவும், இறக்கிவிடவும் கடந்த 24ம் தேதி முதல் முதல் தடை உத்தரவு அமலானது. சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் வேண்டும் என உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.அரசு உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர். அதன்பிறக, சென்னை நகருக்குள் பயணிகளுடன் ஆம்னி பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடர்ந்தது. வெளியூரில் இருந்து வரும் பயணியருடன் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது.. இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், கிளாம்பாக்கம் பஸ் நிலைய நிர்வாக அலுவலர் பார்த்தீபன், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், திருஞானம், அப்சல், மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பணிமனைகளில் பராமரிப்புக்கு பின் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நகர் வழியாக கிளாம்பாக்கம் செல்ல அனுமதிக்க வேண்டும். கோயம்பேட்டில் உள்ளது போல் , கிளாம்பாக்கத்திலும் தரைதளத்தில் 100 அலுவலகங்கள், ஊர் வாரியாக நடைமேடை ஒதுக்குதல் போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் இருந்து வரும் போது நகர் பகுதிகள், பணிமனைகள், அலுவலகங்களில் பயணிகளை இறக்க அனுமதிக்க வேண்டும். பகுதி, பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு மாற கால அவகாசம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எங்களது பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம். இரண்டு நாட்களில் பேச்சு வார்த்தை நடத்தி முடிவை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ''நீதிமன்றம் உத்தரவுப்படி, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் ,பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதன்பிறகு, முடிவெடுத்து அறிவிக்கப்படும்.''என்றனர்.