கன்டெய்னர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு காப்பு
துறைமுகம்:சென்னை துறைமுகத்திற்கு, வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து கப்பல் வாயிலாக, கன்டெய்னர்களில் சரக்கு எடுத்து வரப்படும்.அவ்வாறு, செப்., 7ம் தேதி, சீனாவில் இருந்து 5.35 கோடி ரூபாய் மதிப்பு 5,230 டெல் நோட்புக் லேப்டாப் அடங்கிய கன்டெய்னர் எடுத்து வரப்பட்டது.துறைமுக பணிமனையில் இறக்கிவைக்கப்பட்ட இந்த கன்டெய்னர், திடீரென மாயமானது. இது குறித்து, கன்டெய்னர்களை கையாளும் சி.ஐ.டி.பி.எல்., நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பன், துறைமுகம் போலீசில் செப்., 11ல் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், சி.ஐ.டி.பி.எல்., நிறுவன ஊழியரான இளவரசன், 30, என்பவர், பணிமனையில் இருந்து கன்டெய்னரை எடுத்துச் செல்வதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரிந்தது.இந்த போலி ஆவணங்களை, துறைமுகத்தில் சமர்ப்பித்த மணிகண்டன், டிரைலர் லாரியில் லேப்டாப் அடங்கிய கன்டெய்னரை வைத்து கடத்திச் சென்றதும் தெரிந்தது.இச்சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் முத்துராஜ், 46, திருவொற்றியூர் ராஜேஷ், 39, நெப்போலியன், 46, சிவபாலன், 44, திருவள்ளூர் பால்ராஜ், 31, மீஞ்சூர் மணிகண்டன், 31, இடைத்தரகரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் சங்கரன், 56, ஆகிய ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 5,207 லேப்டாப் அடங்கிய கன்டெய்னர், கடத்தலுக்கு பயன்படுத்திய டிரைலர் லாரியை பறிமுதல் செய்தனர்.இதில், முக்கிய குற்றவாளளியான இளவரசனை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.