காலிமனையில் புதர், குப்பை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
நங்கநல்லுார், நங்கநல்லுார், ராம்நகர், நான்காவது பிரதான சாலையில், தனியார் ஒருவருக்கு சொந்தமான காலிமனை உள்ளது. அதில், செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. மேலும், சுற்று வட்டாரப் பகுதிவாசிகள், அந்த இடத்தில் குப்பை கொட்டி வந்தனர்.இந்நிலையில், அந்த மனையில் உள்ள குப்பையில், நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென காலி மனையில் இருந்த புதரில் பரவியது.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஒரு கட்டத்தில், தீ வேகமாக பரவத் துவங்கியது. அதனால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கிண்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அப்பகுதி புகை சூழ்ந்து காணப்பட்டது.இந்த தீ விபத்து குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனையின் உரிமையாளர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.