உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலக அளவிலான பளு துாக்கும் போட்டி 5 பதக்கம் வென்ற சென்னை வீராங்கனை

உலக அளவிலான பளு துாக்கும் போட்டி 5 பதக்கம் வென்ற சென்னை வீராங்கனை

சென்னை: உலக அளவிலான பளு துாக்கும் போட்டியில், இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்று, சென்னை வீராங்கனை சாதனை படைத்துள்ளார். சர்வதேச பளு துாக்கும் சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில், உலக மாஸ்டர்ஸ் பளு துாக்கும் போட்டி, ஆப்ரிக்கா நாடான தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில், 10ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 35 நாடுகளைச் சேர்ந்த, 488 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இந்தியா பளு துாக்கும் சங்கம் ஆதரவில், 21 வீரர் - வீராங்கனையர் களமிறங்கினர். இதில், தமிழ்நாடு பளு துாக்கும் சங்கம் சார்பில், சென்னை மாங்காடைச் சேர்ந்த வீராங்கனை அமுத சுகந்தி பாபு, 43, என்பவர், 69 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். இவரது பிரிவுக்கான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. அதில், 'ஸ்குவாட்' பிரிவில் 150 கிலோ எடையை துாக்கி வெள்ளியும், 'பெஞ்பிரஸ்' பிரிவில் 95 கிலோ எடையை துாக்கி தங்கமும், 'டெட் லிப்ட்' பிரிவில் 160 கிலோ எடையை துாக்கி வெள்ளியும் வென்று சாதனை படைத்தார். இவரது பிரிவில், மொத்தம் 405 கிலோ எடையை துாக்கி, ஓட்டுமொத்தமாக, வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல், இவர் பங்கேற்ற, 42 - 50 வயதுக்கு உட்பட்டோருக்கான 'டீம் சாம்பியன்ஷிப்' பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை மட்டுமின்றி, ஐந்து பதக்கங்களும் வென்று அமுத சுகந்திபாபு உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2022ல் நியூசிலாந்தில், பளு துாக்குதல் காமன்வெல்த் போட்டியில், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு சிறந்த 'லிப்டர்' விருதுகளும் வென்றேன். அடுத்து, 2023 மங்கோலியாவில் நடந்த உலக போட்டியில், நான்கு வெள்ளி வென்றேன்; தற்போது, உலக அளவிலான போட்டியில், ஐந்து பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. - அமுத சுகந்தி பாபு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ