சென்னை : உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், பட்டுப் போன மரங்களை வெட்டக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற் சங்கத்தின் நிர்வாகி சடையன் என்பவர் தாக்கல் செய்த மனு:சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க, சுகாதாரமான வாழ்க்கை அனைவரும் வாழ, சென்னை நகரை பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கில், மரக் கன்றுகள் நடப்படுகின்றன. அதேநேரத்தில், மோசமான நிலையில், பட்டுப் போன நிலையில் இருக்கும் மரங்களை பற்றி. அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை. பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இம்மரங்கள் உள்ளன.சாலை ஓரங்கள், நடைபாதைகளில் உள்ள மரங்களின் நிலையை, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பட்டுப் போன மரங்களை கண்டால், உடனடியாக அந்த மரங்களை அங்கிருந்து அகற்றி விட வேண்டும். அந்த மரங்களினால் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும்.வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டரிலிருந்து, புதிய ஆவடி தண்ணீர் தொட்டி சாலை வரையில் உள்ள பல மரங்கள், பட்டுப் போயுள்ளன. மரங்களின் வேர்கள் எந்த பிடிப்பும் இல்லாமல், விழுந்து விடக் கூடிய நிலையில் உள்ளன.இதுபோன்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்,பட்டுப் போன மரங்களை வெட்டி விடக் கோரி, மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவை பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். பட்டுப் போன மரங்களை வெட்டி விட்டு, புதியதாக மரக் கன்றுகளை நடுவதற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு, விசாரணையை, 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.- எஸ்.விவேக் -