| ADDED : நவ 19, 2025 04:12 AM
சென்னை: ஹிந்து மதத்துக்கு மாறிய, முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனுவை நிராகரித்த, அம்பத்துார் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது. அம்பத்துாரை சேர்ந்த தம்பதியர், திருமணம் செய்த சில மாதங்களிலேயே பரஸ்பரம் விவாகரத்து கோரி, அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், வழக்கு ஆவணங்களை ஆராய்ந்தது. கணவன் ஹிந்து மதத்தையும், மனைவி இஸ்லாம் மதத்தையும் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதன் காரணமாக, பரஸ்பர விவாகரத்து வழங்க முடியாது என, தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த உத்தரவு: மனைவி பிறப்பால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஹிந்து முறைப்படி தான் வாழ்ந்துள்ளார். ஹிந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதை தெரிவித்த பிறகும், குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்தது தவறு. கணவன், மனைவியின் விவாகரத்து மனுவை, மீண்டும் அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து, நான்கு வாரத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.