| ADDED : பிப் 12, 2024 02:23 AM
ஈச்சங்காடு:பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையிலான 10.6 கி.மீ., ரேடியல் சாலையில், ஈச்சங்காடு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் உள்ளது.பல்லாவரத்தில் இருந்து மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளுக்கு செல்வோர், இந்த பாலத்தின் இடது பக்கம் உள்ள அணுகு சாலையில் பயணிக்க வேண்டும்.அகலம் 25 அடி, 9,000 அடி துாரமுள்ள உள்ள இந்த சாலை நடுவே, இரண்டு கிரவுண்ட் காலி மனையில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், தங்களது உற்பத்திக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருவதும், அதை துாய்மை பணியாளர்கள் வாரம் இருமுறை சுத்தப்படுத்துவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.தவிர, அருகாமை உணவகங்களில் இருந்தும் உணவுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியைக் கடப்பதற்குள் வாகன ஓட்டிகள், கடும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.காலி இடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை, உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அணுகுசாலையை சுத்தமாக பராமரிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் எழுப்பியுள்ளனர்.