கோவில் முன் கழிவுநீர் தேங்குவதால் முகம்சுளிப்பு
நெற்குன்றம்,நெற்குன்றத்தில் விநாயகர் கோவில் முன், பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கசிந்து, சாலையில் தேங்குவது, பக்தர்கள் மற்றும் பகுதிமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. நெற்குன்றம், வள்ளியம்மை நகர் பிரதான சாலையில், வினைதீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து, ஒரு மாதமாக கோவில் முன் தேங்கி வருகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. அத்துடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, இப்பகுதிமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வளசரவாக்கம் மண்டலம், டாக்டர் அண்ணா குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் தயாளன் கூறியதாவது: ஒரு மாதமாக, விநாயகர் கோவில் முன் கழிவுநீர் தேங்கி வருகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. 145 மற்றும் 127வது வார்டு எல்லையில் இப் பகுதி வருவதால், இரு வார்டு குடிநீர் வாரிய அதிகாரிகளும், பராமரிப்பு பணியை தட்டிக்கழிக்கின்றனர். அதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.