உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணவருடன் தகராறு: குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை

கணவருடன் தகராறு: குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை

சென்னை, தேனாம்பேட்டையில், குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளையும் கொல்ல முயன்று, தாய் தற்கொலை செய்தது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.தேனாம்பேட்டை, வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37. இவர், சாலிகிராமத்தில் உள்ள 'பிரசாத் லேப்'பில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, 33.தம்பதிக்கு நான்கு மாதம் மற்றும் 8 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். கடன் பிரச்னையால், கடந்த சில தினங்களாக, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று 4 மாத பெண் குழந்தையின் கழுத்தை இறுக்கியதில் குழந்தை மயங்கி உள்ளது. பின், 8 வயது மகளின் கழுத்தில் பிளேடால் கிழித்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள ஜெயந்தி முயன்றுள்ளார்.அப்போது கயிறு அறுந்ததால், கையில் இருந்த பிளேடால் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மூத்த மகள் அலறி உள்ளார்.சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேச்சு மூச்சின்றி கிடந்த 4 மாத குழந்தையை மீட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். மூத்த மகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ