| ADDED : பிப் 24, 2024 12:11 AM
பொழிச்சலுார், பம்மல் - பொழிச்சலுார் சாலை, அதிக போக்குவரத்து உடையது. இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.முக்கிய சாலையில் கால்வாய் கட்டும்போது, சாலையோர ஆக்கிரமிப்புகளையும், இடையூறாக உள்ள மின்கம்பங்களையும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனால் இச்சாலையில், பல இடங்களில் வளைந்து வளைந்து, மழைநீர் கால்வாய் கட்டப்படுகிறது. சில இடங்களில், மின்கம்பங்கள் அகற்றாமல், அவற்றுக்கு இடையே கால்வாய் செல்கிறது.இதுபோல் கட்டுவது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே அமையும். தவிர, மழைநீர் செல்லவும் தடை ஏற்படும்.இதேபோல், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பல இடங்களில் வளைந்து வளைந்து கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. தற்போது, பம்மல் - பொழிச்சலுார் சாலையில் வளைந்து செல்லும் வகையில் கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.நெடுஞ்சாலைத்துறையினரின், இதுபோன்ற அஜாக்கிரதையால், தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள முக்கிய சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.