கடும் சேதமான சாலைகள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
வளசரவாக்கம், இரவு பெய்த மழையில் ஆற்காடு சாலை மற்றும் சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்கியதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டனர்.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. இதில் மதுரவாயல், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையிலும், மழைநீர் குளம் போல் தேங்கியது. அதேபோல், வளசரவாக்கம் பாத்திமா நகரிலுள்ள சிறுவர் விளையாட்டு திடலில், குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால், குழந்தைகள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அதேபோல், போரூர் செட்டியார் அகரம் பிரதான சாலை, பல்லாங்குழியாக மாறியுள்ளது.சேதமான இந்த சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.