போர் வீரர்கள் நினைவிடத்தில் என்.சி.சி., வீரர்கள் மரியாதை
சென்னை:'தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தப்பட்டது.உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் அமைப்பான, என்.சி.சி., அமைப்பு, 1948 நவ., 23ல் உருவாக்கப்பட்டது. அதன் 76வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. அதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சிக்கு வந்த லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிராரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் - நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி.சி., அமைப்பின் துணை தலைமை இயக்குனர் கமோடர் எஸ்.ராகவ் வரவேற்றார். என்.சி.சி., கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே.எஸ்.பிரார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக, சென்னையை மையமாகக் கொண்ட என்.சி.சி., 13வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.