ஏர்போர்ட்டில் வைபை சேவையில் சிக்கல் பயன்படுத்த முடியாமல் பயணியர் திணறல்
சென்னை, சென்னை விமான நிலையத்தில் 'வைபை' சேவை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இலவச 'வைபை' சேவை வழங்கப்படுகிறது. பயணியர் இந்த சேவையை, பெயரிடப்பட்ட நெட்வொர்குகளை தேர்ந்தெடுத்து, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை, 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில், இலவச வைபை சேவை கிடைக்காமல் பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:சென்னையில் இருந்து மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு ஏராளமானோர் வேலை காரணங்களுக்காக செல்வதால் லேப்டாப், டேப் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வர். இலவசமான மற்றும் பாதுகாக்கப்பட்ட வைபை சேவையை விமான பயனியர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையில் சிக்கல் ஏற்படுகிறது. வைபை இணைப்பு கிடைக்காமல், பலரும் அவதிப்படுகின்றனர். அத்தியாவசிய சேவையாக வைபை இணைப்பு மாறியுள்ள நிலையில், இப்பிரச்னை பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் புகார் அளித்ததில், சம்மந்தமில்லாத பதில்கள் தெரிவிக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய இயக்குநர் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில் இயங்கும் மூன்று டெர்மினல்களிலும் வைபை சேவை வழங்குவது, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படும். அவர்கள் ஆணையத்திடம் பணம் செலுத்தி ஒப்பந்தம் எடுப்பர். தற்போதுள்ள ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. மீண்டும் ஒப்பந்தம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், புதிய ஒப்பந்ததார்கள் யாரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதும், தடையின்றி வைபை சேவை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சர்வதேச பயணியருக்கு பெரிய நெருக்கடி
உள்நாட்டில் பயணிக்கும் பயணியர் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு 'வைபை' சேவையை பெறமுடியும். இதுவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் பாஸ்போர்ட் விபரங்களை ஸ்கேன் செய்து அல்லது இந்திய மொபைல் எண்ணில் மட்டுமே பயன்படுத்த முடியும். பெரும்பாலான பயணியருக்கு இது பற்றி தெரியவில்லை. இதனால், சென்னை வந்து இறங்கியதும் இணையதளம் மற்றும் மற்ற செயலிகளை பயன்படுத்த முடியாமல், வைபை சேவையும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.