செங்குன்றம், சென்னை மற்றும் தமிழகமெங்கும், பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு, நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது.முதல்வர் துவக்கி வைத்த பின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர், சென்னையில் பேட்டி அளித்தனர்.அப்போது, 'பரிசு தொகுப்பு வாங்க, 'டோக்கன்' பெறாதவர்கள், கவலைப்பட தேவையில்லை. ரேஷன் கார்டுடன் கடைகளுக்குச் சென்று, 14ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்' என்றனர்.ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை, 13ம் தேதியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், நேற்று மதியம் வாய்மொழியாகவும், 'வாட்ஸ்சாப்' தகவல் மூலமும் தெரிவித்துள்ளனர். அதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.'டோக்கன்' பெறாதவர்கள், 14ம் தேதி வந்து, பரிசு தொகுப்பு கேட்டால், எப்படி கொடுப்பது என கேள்வி எழுந்துள்ளது. கடந்த மாதம், 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ள நிவாரணம் பெற மாதவரம், மாத்துார், செங்குன்றம், அலமாதி சுற்றுவட்டாரங்களில், 'டோக்கன்' பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்காமல், ஒரு நாள் முன்னதாகவே அந்த பணி நிறுத்தப்பட்டது.அதனால், அவர்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது, மீண்டும் அதே பிரச்னை ஏற்படும் நிலை உள்ளதாக, ரேஷன் கடை ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.