உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கும்டாவின் போக்குவரத்து அறிக்கையை சி.எம்.டி.ஏ., திட்டத்தில் சேர்க்க பரிந்துரை

 கும்டாவின் போக்குவரத்து அறிக்கையை சி.எம்.டி.ஏ., திட்டத்தில் சேர்க்க பரிந்துரை

சென்னை: ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமான 'கும்டா' தயாரித்த, விரிவான போக்குவரத்து அறிக்கையை, சி.எம்.டி.ஏ.,வின் மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்க, மாநில திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 5,904 சதுர கி.மீ., பரப்பளவு பகுதி, சி.எம்.டி.ஏ.,வின் விரிவாக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியில், 2048ம் ஆண்டு வரையிலான காலத்தில் எழும் போக்குவரத்து தேவைகள், வாகனங்கள் எண்ணிக்கை பெருக்கம் தொடர்பாக, கும்டா ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், சென்னை பெருநகருக்கு விரிவான போக்குவரத்து அறிக்கை தயாரித்துள்ளது. இதில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய போக்குவரத்து திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதற்கான திட்டங்களுக்கு, தமிழக அரசு, செப்., 22ல் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த அறிக்கை, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாநில திட்டக்குழு உறுப்பினரான எழிலன் எம்.எல்.ஏ., தலைமையில், திட்டக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.சுதா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், கும்டா தயாரித்துள்ள விரிவான போக்குவரத்து அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சி.எம்.டி.ஏ., வரும் மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை