மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, கென்னடி நகரைச் சேர்ந்தவர் குமார், 44. இவரது மனைவி, குமாரி, 44. மகள் அலிஷா, 5. குமார், சென்னை மாநகராட்சி, 45வது வார்டில் குப்பை சேகரிக்கும் ஒப்பந்த பணி செய்தார்.நேற்று முன்தினம், வியாசர்பாடி, பி.வி.காலனியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் கை, கால்கள் கழுவுவதற்காக, மோட்டார் சுவிட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில், குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன், அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.எம்.கே.பி.நகர் உதவி ஆணையர் மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர், இழப்பீடு வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.