நடைபாதை ஆக்கிரமிப்புகள் பூந்தமல்லியில் அகற்றம்
பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பூந்தமல்லியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தின் வெளியேயும், உட்புறமும், 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்தன. இவை, பேருந்துகள் வந்து செல்வதற்கும், பயணியருக்கும் இடையூறாக இருந்தன.இதையடுத்து, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் சென்று பழக்கடை, பூக்கடை, நரிக்குறவர்கள் கடை உள்ளிட்ட 30 நடைபாதை கடைகளை, நேற்று அகற்றினர். எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, இரண்டு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.மேலும், ஆக்கிரமிப்பை அகற்றும் போது, நடைபாதை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.