கல்லுாரி மாணவரை கடத்தி தாக்கிய இருவருக்கு காப்பு
நொளம்பூர் :நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 19. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ், 20, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில், நேரில் பேச வேண்டும் என, ஆகாஷை, கடந்த 27ம் தேதி மாலை மனோஜ் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற ஆகாஷை, மனோஜ் மற்றும் அவரது நண்பர் அபிஷேக், 20, இருவரும் தாக்கியுள்ளனர்.பின், அவர்களது பைக்கில் ஆகாஷை, திருவேற்காடு, மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.இது குறித்து தகவலறிந்த ஆகாஷின் நண்பர்கள், வானகரம் அருகே ஆகாஷை கடத்தி சென்ற பைக்கை தடுத்து நிறுத்தியுள்ளனர்.பின், மனோஜ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி, ஆகாஷை மீட்டு, திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆகாஷின் நண்பர்கள் தாக்கியதில், தலையில் காயமடைந்த மனோஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆகாஷ் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார், மனோஜ் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் மீது வழக்கு பதிந்தனர்.மனோஜ் மருத்துவமனையில் உள்ளதால், அபிஷேக்கை போலீசார் கைது செய்து, நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை, போலீசார் கைது செய்துள்ளனர்.