செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த...ரூ.22 கோடி!:கனமழையை எதிர்கொள்ள தயாராகிறது
குன்றத்துார்:கடந்தாண்டு 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தில் சேதமான செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை, 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்து, பலப்படுத்தும் பணி துவங்க உள்ளது.சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 6,300 ஏக்கர் பரப்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி ஆழமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது. ஏரியின் உபரி நீரை வெளியேற்ற 19 கண் மதகு மற்றும் ஐந்து கண் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயலின்போது பெய்த கனமழையால், ஏரியின் 19 கண் மதகு அருகே, கரையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு சேதமாகியது. கரை அரிப்பை தடுக்க, மண் மூட்டைகள் அடுக்கி, கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல், ஏரிக்கரையின் தடுப்பு சுவர்கள், உள்ளே பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளன.அதனால், கன மழையை தாங்கும் வகையில் ஏரிக்கரையை பலப்படுத்துவதோடு, சரிந்த கற்களை அகற்றி கான்கிரீட் சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. சீரமைப்பு பணிக்கு அரசு 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை அடுத்து, நீர்வளத் துறை இப்பணிக்காக 'டெண்டர்' விட்டுள்ளது.இந்நிலையில், செம்பரம்பாக்கம் கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில், ஏரியையும் துார் வாரினால் கூடுதல் நீரை தேக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும், உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஏரியில் அதிக நீரை தேக்கி வைக்கமுடிவில்லை. குடியிருப்புகளின் பெருக்கத்தால், இந்த ஏரி நீரை பயன்படுத்தி நடந்த விவசாயம் 98 சதவீதம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, இந்த ஏரியை அதிக ஆழம் துார்வாரினால் தற்போது உள்ள கொள்ளளவைவிட, கூடுதலாக ஒரு டி.எம்.சி., நீரை தேக்கி வைக்க முடியும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியை துார்வார, அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரிக்கரை 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க 'டெண்டர்' விடப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் பணிகளை துவங்க உள்ளோம். ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏரியை துார்வாருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார்.
என்னென்ன பணிகள்?
* ரூ.10 கோடி மதிப்பில் 700 மீட்டர் நீளத்திற்கு ஏரிக்கரையின் உட்புறம் கரையில் சரிந்த கற்களை அகற்றி, கான்கிரீட் சுவர் அமைக்கப்பட உள்ளது* ரூ.4 கோடி மதிப்பில் மதகின் வெளிப்புற பகுதியில் சேதமான கரைகளை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது* ரூ.2 கோடி மதிப்பில் 3 கி.மீ., துாரத்திற்கு ஏரிக்கரையின் மேல் கைப்பிடி சுவர் அமைக்கப்பட உள்ளது* ரூ.6 கோடி மதிப்பில் நீர் உள்வாங்கி கோபுரத்தின் ஷட்டர்கள், வால்வுகளை சீரமைப்பு, வரத்து கால்வாய் சீரமைப்பு மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நீர்மட்டம் 16 அடியாக உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு, பூண்டி ஏரி நீர் மற்றும் மழை நீர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 13 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 16.15 அடியாக உயர்ந்துள்ளது. கொள்ளளவு 1.749 டி.எம்.சி.,யாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 365 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பிற தேவைக்கு 134 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரி அலுவலகத்தில் தொலைபேசி இல்லை
செம்பரம்பாக்கம் ஏரியின் இளநிலை பொறியாளர் அலுவலகம், ஏரியின் அருகே அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்திற்கு என இருந்த தொலைபேசி எண் 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. அதன் பின், தற்போது வரை இந்த அலுவலகத்திற்கு என, தனியாக போன் வசதி இல்லை.இதனால், ஏரிக்கரை பலவீனம், ஏரி நீர் திறப்பு குறித்த தகவல் உள்ளிட்ட விபரங்களை பெற முடியாமலும், புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க முடியாமலும், சுற்றுப்புற கிராமத்தினர் சிரமப்படுகின்றனர். நேரடியாக புகார் அளிக்க சென்றாலும், ஏரி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் வழிகள், இரும்பு கேட் அமைத்து மூடப்பட்டுள்ளன. இதனால், அலுவலகத்திற்கென தனியாக தொலைபேசி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.