பணி நிரந்தரம் கோரி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுதும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வரை, 13 ஆண்டுகளாக, 3,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, 2012ல் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. ஆனாலும், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று, துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மாநில மைய நல சங்க தலைவர் சங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1,000க்கும், மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். ஒரு வாரத்திற்கு அரசாணை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட கலைந்து சென்றனர்.