மயிலாப்பூர்:சென்னை மயிலாப்பூரில் கோவில்கள் அதிகம். இதனால், கோவில்களை ஒட்டியுள்ள சாலையோரங்களில் தேங்காய், மாலை, பூஜை உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகளும் தானாக அமைந்து விடுகின்றன.இந்நிலையில் கடந்த வாரம், முண்டக கன்னியம்மன் கோவில் தெரு பகுதியில், கோவிலுக்கு எதிர்புறத்தில் சாலையை ஆக்கிரமித்து, பூஜை பொருட்கள் கடைகள் ஏராளமான இருந்தன. சாலை குறுகிப் போனதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், கடந்த வாரம் இந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டு, அந்த பகுதி துாய்மைப்படுத்தப்பட்டது.இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் மேஜை, நாற்காலிகள் அமைத்து, கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில், முதலில் ஒருவர் கடை அமைக்கிறார். பின், ஒவ்வொருத்தராக கடை அமைத்து, 'செட்' அமைப்பது, 'தார்பாலின்' போட்டு கடைகளை விரிவாக்கம் செய்வது என ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.இந்த விஷயத்தில் இவர்கள் மாநகராட்சிக்கும் பெரும் சவாலாகவே உள்ளனர். இதே போல, மயிலாப்பூர் மாட வீதிகளிலும் சாலையை ஆக்கிரமித்து நிறைய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இங்குள்ள கடைகளை அகற்றினாலும், ஓரிரு நாட்களில் மீண்டும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது.இது குறித்து, பூ விற்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:கோவில் வாசலில் கடைகள் அமைத்தால் தான், எங்களுக்கு வியாபாரமாகும். சாலையை ஆக்கிரமித்து தான் கடைகள் அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு மாநகராட்சி ஒரு தீர்வு கண்டு, நிரந்தர கடைகள் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.