சென்னை: பல்கலைகளுக்கு இடையிலான தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், 90 பல்கலை மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவில், அமெட் பல்கலை உடற்கல்வியியல் துறை சார்பில், தென் மண்டல பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி, நேற்று துவக்கியது. போட்டிகள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கின்றன. பல்கலைகளுக்கு இடையிலான இப்போட்டியில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 90 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம், நான்கு குழுவாக பிரித்து, 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று காலை நடந்த முதல் நாள் போட்டியில், எம்.ஜி.ஆர்., பல்கலை அணி, 3 - 2 என்ற செட் கணக்கில், ஆந்திராவின் கிருஷ்ணா பல்கலையையும், காருண்யா பல்கலை, 3 - 0 என்ற செட் கணக்கில், காக்கிநாடா ஜே.என்.டி.யு., பல்கலையையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். சைதை வீரர் 'சாம்பியன்' அசோக் நகர் ஒய்.எம்.சி.ஏ., சார்பில், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற, ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் இறுதி போட்டியில், மேற்கு சைதாப்பேட்டை கமலநாதன் கிளப்பை சேர்ந்த எத்திராஜன், 57, என்பவர், ஒய்.எம்.சி.ஏ.,வை சேர்ந்த சரவணகுமார், 41, என்பவரை, 8 - 11, 11 - 6, 12 - 10 என்ற செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.