தப்பி ஓடிய ரவுடிக்கு கையில் மாவுக்கட்டு
புளியந்தோப்பு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 21, மற்றும் ராகுல், 18, ஆகியோர் கடந்த 10ம் தேதி இரவு 10:00 மணி அளவில் புளியந்தோப்பு நரசிம்மா நகர் பிரதான சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் சென்ற இருவர், ஸ்ரீதரையும், ராகுலையும் சரமாரியாக வெட்டினர். இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அதில், புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 'வெள்ளை' சஞ்சய்குமார், 20, மற்றும் கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்ற மற்றொரு சஞ்சய், 20 ஆகிய இரண்டு ரவுடிகளும் மதுபோதையில் வெட்டியது தெரியவந்தது. ரவுடி சஞ்சையை நேற்று மடக்கிப் பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடினார். அப்போது, வழுக்கி கீழே விழுந்ததில், சஞ்சயின் இடது கை உடைந்தது. சிகிச்சைக்கு பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு ரவுடி வெள்ளை சஞ்சய்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.